ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை..... பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை......
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.
இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவம், பாதுகாப்பு படையினர், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், பஹல்காமில் 26 அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று காஷ்மீரில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் உள்ள நதுல் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூன்று பேரும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
No comments