பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி..... இஸ்ரோ அறிவிப்பு
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. ஆனால், விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்வியடைந்தது.
இந்த ராக்கெட்டில் 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். அனைத்து கால நிலைகளிலும் துல்லியமாக படங்களை எடுக்கும் திறன் கொண்டது. திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோளை ராக்கெட் நிலை நிறுத்த முயற்சித்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் தோல்வியடைந்தது.
விவசாயம், கடல் வளம், வெள்ளம் கண்காணிப்பு, கடலோர பாதுகாப்பிற்கும் இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட இருந்தது. பூமியில் எந்தவொரு இடத்தையும் துல்லியமாக படம் பிடிக்கும் கேமரா கொண்ட செயற்கைக்கோள் இதுவாகும். இஸ்ரோ ஏவிய 101-வது ராக்கெட் இதுவாகும். ஆனால், ஏவிய சில நிமிடங்களில் ராக்கெட் தோல்வியடைந்தது. இதனால், செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்த முடியவில்லை. இந்த தோல்வி குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
No comments