நாகை அருகே எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் வைகாசி மாத கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் அர்ச்சனைக்கு தனி ஏற்பாடு செய்யப்பட்டு உற்சவரான ஆறுமுகவேலவர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக சிறப்பு யாக பூஜையும் அதனைத் தொடர்ந்து மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. நாகை மட்டுமின்றி திருவாரூர் காரைக்கால் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிருத்திகை நட்சத்திரம் மட்டுமின்றி அமாவாசை மற்றும் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து, இரவு வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருள வீதியுலா காட்சி நடக்க உள்ளது.
கீழ்வேளூர் நிருபர் த.கண்ணன்
No comments