• Breaking News

    பாஜகவோடு கூட்டணி வைக்க அன்புமணியும் சவுமியாவும் என் கால்களை பிடித்து அழுதார்கள்..... ராமதாஸ் பேட்டி

     


    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்.. தவறு செய்தது அன்புமணி அல்ல 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்து விட்டேன்.

    எங்கள் கட்சியை பற்றிய செய்திகளை பலமுறை கேள்வி கேட்டுள்ளீர்கள் நானும் பதில் அளித்துள்ளேன். தர்மபுரியில் ஒரு கூட்டத்தில் அன்புமணி பேசியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்தேன். நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் பதவி நீக்கம்? என்றும் அன்புமணி பேசி இருந்தார். இது முழுக்க முழுக்க மக்களையும், கட்சிக்காரர்களையும் திசை திருப்பும் முயற்சியாகும்.

    தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடம் அனுதாபம் பெற முயற்சி செய்துள்ளார். அதற்கு உண்டான விளக்கம் அளிப்பது என் கடமையாகும். இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரைகளை கொண்ட மருந்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்திய கட்சியில் கலகத்தை அன்புமணி ஏற்படுத்தினார். வளர்த்த கடா என் மார்பில் எட்டி உதைத்தது. கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்துள்ளார். அழகான ஆளுயர கண்ணாடியான கட்சியை ஒரு நொடியில் உடைத்தது யார்?

    புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில் மேடை நாகரீகம் இல்லாமல் செயல்பட்டது யார்? ஏதோ போகிற போக்கில் இதை நான் சொல்லவில்லை. ஆதாரங்களுடன் தான் சொல்கிறேன். 

    எனக்கும், அன்புமணிக்கும் உதவியாக இருக்கவே முகுந்தனை நியமனம் செய்தேன். அன்புமணி மைக்கை டேபிளில் வீசியது, என் தலையில் வீசியது போல் இருந்தது. மேடை நாகரீகம் இல்லாமல் காலை ஆட்டிக் கொண்டு அன்புமணி இருந்தது சரியா?

    தனது தாய் சரஸ்வதி மீதே பாட்டிலை எறிந்து தாக்க முயன்றவர் அன்புமணி. கட்சி பிரச்சனைகள் பற்றி பேசியபோது அவரது அம்மாவின் மீதே பாட்டிலை வீசி ஏறிந்தார். நல்லவேளை பாட்டில் அவர்மீது படவில்லை. பனையூரில் அலுவலகம் திறந்திருக்குறேன், அங்கே வந்து என்னை சந்தியுங்கள் எனச் சொன்னது சரியா? 4 சுவற்றுக்குள் முடிக்க வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டுவந்தது யார்?..

    அன்புமணி கூசாமல் பொய் சொல்வார். உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அவர் கூறியது பொய்.தகப்பனிடம் தோற்பது ஒன்றும் அவமானகரமானது அல்ல.

    அதிமுக-வோடு கூட்டணிக்கு போங்கள் என சொன்னேன். ஆனால் அன்புமணியும் சவுமியாவும் என் கால்களை பிடித்துக் கொண்டு பாஜக-வோடு கூட்டணி வைக்க வேண்டும் என அழுதார்கள். வேறு வழியின்றி சம்மதித்தேன்.

    அதிமுக-வோடு சேர்ந்திருந்தால் குறைந்தது மூன்று இடமாவது கிடைத்திருக்கும். அவர்களும் 6-7 இடங்களுக்கு மேலேவே ஜெயித்திருப்பார்கள். அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை. அன்புமணிக்கு தலைமைப் பண்பு அறவே இல்லை.

    இவ்வாறு ராமதாஸ் கூறினார். 

    பா.ம.க.வில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் அதிகார யுத்தம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    No comments