• Breaking News

    கூட்டணியில் குண்டு போட்ட முன்னாள் திமுக எம்எல்ஏ

     



    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெறாது என திமுக முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் பேசியது, திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் அருகேயுள்ள அமரடக்கியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது: கடந்த திமுக ஆட்சியில்(2006- 2011)புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மட்டுமே ஆளும் கட்சி எம்எல்ஏ. அப்போது, அமைச்சர்களின் தொகுதிகளை விட அறந்தாங்கி தொகுதியில் சாலை, ஏரி மேம்பாடு, கட்டிடங்கள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.அப்போது கொண்டு வரப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு, அதன் பிறகு வந்த எம்எல்ஏக்களால் சொந்தக் கட்டிடம் கட்டப்பட வில்லை. தனியார் வாடகைக் கட்டிடத்தில் ஆவணங்கள் பாதுகாப்பின்றி உள்ளன. நான் எம்எல்ஏவாக இருந்தபோது 5 முறை போக்குவரத்துத் துறை அமைச்சரை அழைத்து வந்து அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தினேன். தற்போதும் எத்தனையோ புதிய பேருந்துகள் அறிவிக்கப்படுகின்றன.ஆனால், ஒரு பேருந்துகூட அறந்தாங்கிக்கு கொண்டு வரப்படவில்லை. கட்சித் தலைமை அறிவிக்கும் குடிநீர்த் திட்டத்தையும், சாலைப் பணியையும் தான் கொண்டு வந்ததாக அவர் (அறந்தாங்கி எம்எல்ஏ ராமச் சந்திரன்) கூறுகிறார். தேர்தல் நெருங்கிவிட்டதால் தொகுதியை அவர் சுற்றி சுற்றி வருகிறார்.

     வரும் தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிட்டால் தோல்வி அடைவது உறுதி. இதுகுறித்து கட்சித் தலைமையிடம் பேசத் தயாராக உள்ளேன்.அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுயில் போட்டியிட்ட நவாஸ் கனிக்கு, அறந்தாங்கி தொகுதியில் இருந்து 60 ஆயிரம் பேர் வாக்களித்தனர். அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ள தொகுதியில் கூட இவ்வளவு வாக்குகளை திமுக கூட்டணி வேட்பாளர்களால் பெற முடியவில்லை. எனவே, வரும் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்றார். உதயம் சண்முகத்தின் பேச்சு, திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது முதல் முறையல்ல..: கடந்தாண்டு மக்களவைத் தேர்தலின்போது, அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னிலையில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிமுகக் கூட்டத்திலும், வரும் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்காமல் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் சென்னை அறிவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபடுவேன் என உதயம் சண்முகம் பேசியது குறிப்பிடத்தக்கது.

    No comments