• Breaking News

    கள்ளக்காதலுக்கு இடையூறு..... கணவனை கொன்ற பெண், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

     


    திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஷேக்தாவூது (வயது 40). தையல்காரரான இவர் பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவரது மனைவி ரகமத் பேகம் என்கிற யாஸ்மின் (31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உண்டு. இவர்களது வீட்டின் முதல் தளத்தில் ஷேக் தாவூத்தின் தங்கை கணவரான அப்துல் அஜீஸ் (36) குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் அப்துல் அஜீசுக்கும், ரகமத் பேகம் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இதனை அறிந்த ஷேக்தாவூது மற்றும் அவரது தந்தை அமீர் பாஷா, தங்கை மும்தாஜ் ஆகியோர் இருவரையும் கண்டித்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்பை கைவிடவில்லை. இதனால் ஷேக் தாவூதுவிற்கும், அவரது மனைவி ரகமத் பேகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் தங்களது தகாத உறவிற்கு தடையாக இருந்த ஷேக் தாவூதுவை கொலை செய்ய ரகமத் பேகமும், அப்துல் அஜீசும் சதி திட்டம் தீட்டினர்.

    இந்நிலையில் கடந்த 2.6.2021 அன்று ஷேக் தாவூதுவிற்கு திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரகமத் பேகமும், அப்துல் அஜீசும் ஷேக் தாவூதுவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வைத்தனர். பின்னர் டாக்டர்களிடம் காட்டி மாத்திரைகள் வாங்கி வந்து, அவரை நன்றாக கவனித்துக்கொள்வது போல் நடித்துள்ளனர்.

    கடந்த 4.6.2021 அன்று டாக்டர்கள் எழுதி கொடுத்த மாத்திரைகளுக்கு பதிலாக 10 தூக்க மாத்திரைகளை அப்துல் அஜீஸ் வாங்கி அதனை ரகமத் பேகத்திடம் கொடுத்தார். 5-ந் தேதி இரவு 5 தூக்க மாத்திரைகளை ஷேக் தாவூத்திற்கு ரகமத் பேகம் கொடுத்தார். அவற்றை சாப்பிட்ட ஷேக்தாவூத் நன்றாக தூங்குவதாக அப்துல் அஜீசிடம் ரகமத் பேகம் கூறினார்.இதைத்தொடர்ந்து நள்ளிரவு 2 மணி அளவில் அங்கு வந்த அப்துல் அஜீஸ் வீட்டில் இருந்த தலையணையை ஷேக் தாவூதுவின் முகத்தில் வைத்து அழுத்தினார். ரகமத் பேகம், ஷேக் தாவூதுவின் இரண்டு கால்களையும் அமுக்கி பிடித்துக்கொண்டார். அப்போது ஷேக்தாவூது திமிறிக்கொண்டு முனகல் சத்தம் எழுப்பினார். சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது பெரியப்பா மகன் சபீ என்பவர், அங்கு என்ன நடக்கிறது? என்று கேட்டார்.

    அதற்கு அவர்கள் இருவரும் இது எங்கள் குடும்ப பிரச்சினை உன் வேலையை பார்த்துக்கொண்டு போ, இதில் நீ தலையிட்டால் உன்னையும் கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால் அவர் அங்கிருந்து சென்று விட்டார். தலையணையால் அழுத்தியதில் ஷேக் தாவூது மூச்சு திணறி இறந்தார். இந்நிலையில் காலை 7 மணி அளவில் ரகமத் பேகம் தனது கணவர், உடல் நலக்குறைவினால் இறந்து விட்டதாக அழுது புரண்டு நாடகமாடி உள்ளார்.

    மேலும் ஷேக் தாவூதுவின் உடலை குளிப்பாட்டி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அப்போது அங்கு வந்த சபீ நள்ளிரவில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு ரகமத் பேகமும், அப்துல் அஜீசும் சேர்ந்து கொலை செய்து விட்டதாக கூறினார். இதுபற்றி தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் ஷேக் தாவூது கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் ரகமத் பேகத்தையும், அப்துல் அஜீசையும் கைது செய்து திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அப்துல் அஜீசுக்கும், ரகமத் பேகத்திற்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு அளித்தார்.

    No comments