• Breaking News

    மாங்காடு பட்டூரில் சாலை விரிவாக்க பணி கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு

     


    காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அருகில் உள்ள பட்டூர் பகுதியில் மாங்காடு முதல் மவுலிவாக்கம் வரை செல்லும் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையின் இருபுறமும் உள்ள கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் காலை சம்பவ இடத்திற்கு ஜேசிபி பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர்.

    பட்டூர் பள்ளிவாசல் தலைவர் சாலிக் பாஷா, ரஃபீக், அகமது உசேன், குன்றத்தூர் முன்னாள் எம்எல்ஏ பழனி, எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைவர் நசுருதீன்,  தமுமுகவின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சலீம் கான், பட்டூர் பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டு வரும் வியாபாரிகள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் ஏராளமாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சாலை விரிவாக்க பணிகளுக்காக கடையின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகளை ஜேசிபி எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.இதனால் வியாபாரிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    வியாபாரிகளின் எதிர்ப்பை மீறி அரசு அதிகாரிகள் கடை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.ஏற்கனவே சாலை துறை சார்பில் அளவிடப்பட்ட பகுதி முழுவதும் சாலை விரிவாக்க பணிகளுக்காக கடைகள் இடிக்கப்படும் என உறுதியாக அரசு அதிகாரிகள் தெரிவித்து கடைகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து அந்தப் பகுதியில் கடை வைத்திருக்கும் பட்டு.பாண்டியன் என்பவர் கூறுகையில்,

    மாங்காடு மதுரா பட்டூர் வன்னியர் குல சத்திரியர் நல்வாழ்வு அறக்கட்டளைக்கும், விநாயகர் கோவில், ஸ்ரீ பச்சையம்மன், ஜோதிமன்னார் கோவில்களுக்கு சொந்தமான நஞ்சை, பட்டா நிலம், சர்வே எண் 433/1-B, பட்டா எண் 479, உள்ள 51-சென்ட் நிலத்தில் 1500 சதுர அடி இடத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து கடைகள் அமைத்து, அந்த கடைகள் வாடகை விடப்பட்டு அந்த வருமானத்தைக் கொண்டு எங்கள் சங்க வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறோம்.தற்போது சாலை விரிவாக்க பணிகள் எனச் சொல்லி பட்டா நிலத்தில் உள்ள எங்களது ஐந்து கடைகளை முழுவதுமாக இடிக்க அதிகாரிகள் அளவீடு செய்துள்ளனர்.

    பட்டா நிலத்தில் உள்ள கடைகளை எடுக்கக் கூடாது.அப்படி சாலை விரிவாக்க பணிகளுக்கு அரசு எடுத்துக் கொண்டால் அதற்கு முறையாக இழப்பீடு வழங்க வேண்டும்.இழப்பீடு தர முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.காரணம் கேட்டால் தற்போது இந்த இடம் கிராம நத்தத்திற்கு உட்பட்டது என கூறுகின்றனர்.

     இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், காஞ்சி மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளோம், நாங்கள் அளித்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை.அதற்குள்ளாக இன்று திடீரென ஜேசிபி இயந்திரங்களுடன் கடைகளை இடிக்க வந்துள்ளனர்.

     எங்களுக்கு உரிய நியாயம் வேண்டும். சாலை விரிவாக்க பணிகளுக்கு நாங்கள் எதிர்க்கவில்லை,  பட்டா இடத்தில் உள்ள கடைகளை இடித்தால் அதற்கு உரிய இழப்பீடு  வழங்க வேண்டும் என கேட்கிறோம்.இழப்பீடு தரவில்லை என்றால் நாங்கள் எப்படி கடைகளை இடிக்க அனுமதிப்பது என தெரிவித்தார்.

    No comments