தோரணமலை முருகன் கோவிலில் கோடை விழா கொண்டாட்டம்.... யோகா, கராத்தேவில் அசத்திய மாணவர்கள்.....
தோரணமலை முருகன் கோவிலில் கோடை விழா கொண்டாட்டத்தையொட்டி மாணவ, மாணவிகள் யோகா, கராத்தே செய்து அசத்தினர்.
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் கோடை விடுமுறையை மாணவ, மாணவிகள் பயனுள்ளதாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் கோடை விடுமுறை கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்தாண்டும் 3வது வாரமாக நேற்று கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிறுவர்-சிறுமியர் திருக்குறளை ஒப்புவித்தனர்.
தொடர்ந்து கயத்தாறில் இருந்து வந்த மாணவ- மாணவிகளின் யோகா மற்றும் நடனமும், கடையம் விவி ஸ்போட்ஸ் குழுவைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கராத்தே மற்றும் வாள்பயிற்சியும் செய்து காட்டினர். மேலும் ஆலங்குளம், ரெட்டியார்பட்டி, கழுநீர்குளம், ஓடை மறிச்சான் பகுதியைச் சேர்ந்தவர்கள் யோகா மற்றும் பல்வேறு சாகச நிகழ்ச்சி செய்து காட்டி பொதுமக்களை வியக்க வைத்தனர். அதன்பின்னர் பூலாங்குளம் சிலம்பம் குழுவினர் சிலம்பம் ஆடினர்.
பின்னர் சிறுவர், சிறுமிகள் பாரம்பரிய விளையாட்டான பம்பரம், கோலி விளையாடினர். அவர்களுக்கு அந்த கால தின்பண்டமான கடலை, எள்ளு மிட்டாய் வகைகள் மற்றும் இயற்கை குளிர்பானம் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் பக்தி பாடல்கள் பாடினார்கள். கோவிலுக்கு வந்த மாணவ-மாணவிகள் பலர் அங்குள்ள நூல் நிலையத்திற்கு சென்று படித்தனர். இறுதியில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் கோவிலுக்கு வந்திருந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், மதியம் சாப்பாடும் பரிமாறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.
No comments