• Breaking News

    குஜராத் காந்தி நகரில் பிரதமர் மோடி ரோடு ஷோ..... மக்கள் உற்சாக வரவேற்பு

     


    பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நேற்று முதல் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி தகோட் நகரில் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் ரூ.21,405 கோடியில் கட்டப்பட்டுள்ள ரெயில் என்ஜின் தொழிற்சாலையும் அடங்கும்.

    இதன் மூலம் நாட்டிலேயே முதல் முறையாக 9 ஆயிரம் குதிரை திறன் கொண்ட ரெயில் என்ஜின் உற்பத்திப்பிரிவு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் ஆமதாபாத்-வேரவல் வந்தே பாரத் ரெயில் மற்றும் வல்சாத்-தகோத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய அவர் ஆபரேஷன் சிந்தூரை புகழ்ந்துரைத்தார். தாஹோத் மற்றும் புஜ் நகரில் அடுத்தடுத்து பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு காந்திநகர் சென்றார்.

    இந்தநிலையில், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.5,536 கோடி மதிப்பிலான திட்டங்களை அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக சென்ற பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மூவர்ணக் கொடியுடன் வரவேற்பு அளித்தனர். வாகனப் பேரணியில் பிரதமருடன் குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேலும் கலந்துகொண்டார்.

    ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப்பிறகு முதல் முறையாக தனது சொந்த மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மோடியை, திரளான மக்கள் சாலையின் இருபுறமும் நின்று மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வரவேற்றனர்.

    No comments