திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
சென்னை புதுவண்ணாரப்பேட்டை அசோக் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (27 வயது). விசுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இன்னும் திருமணம் ஆகாத இவர், மின்வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ள தனது தந்தை தமிழரசனுக்கு உடந்தையாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுபாஷ், தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தனது நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு நடந்த டி.ஜே. நிகழ்ச்சியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுபாஷ் பாடல்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடினார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அவரது நண்பர்கள் மற்றும் மணமக்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சுபாஷ் சந்திரபோசை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுபாஷ் சந்திரபோஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு அவரது நண்பர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments