திருக்குவளை அருகே தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
நாகை மாவட்டம் திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு: இரவு 7 மணி முதல் விடிய விடிய நீடித்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் கைக்குழந்தைகள், முதியவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் அவதி.
நாகை மாவட்டம் திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து வாழக்கரை,மடப்புரம், வலிவலம்,சாட்டியக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மடப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட களத்திடல்கரை பிள்ளையார் கோயில் தெருவில் நேற்று இரவு 7 மணிக்கு திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு கிராம மக்கள் போன் செய்தாலும் உரிய பதில் கிடைக்கதாக சூழலில் விடிய விடிய மின்சாரம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர். குறிப்பாக இந்த பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் நீரேற்றும் அறை உள்ள சூழலில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக, நீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி பொது மக்களுக்கு விநியோகம் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டதிலிருந்து இந்த பிரச்சனை நிலவுவதாகவும், அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவது வாடிக்கையாக்கி உள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் தங்களது வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக தற்பொழுது கோடை காலம் என்பதால் திடீரென இரவு வேளையில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக கை குழந்தை வைத்திருக்கும் பெண்கள் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய் விளக்கு, டார்ச் லைட் உள்ளிட்டற்றின் வெளிச்சத்தைக் கொண்டு இரவு பொழுதை கழித்ததாகவும், வயல் சார்ந்த இடம் என்பதால் விஷஜந்துகள் நிறைந்து இருப்பதாகவும், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியப் போக்கால் அசம்பாவித சம்பவம் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் அப்பகுதியினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக இந்த பகுதியில் மட்டும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும், அதனை சரி செய்தாலும் மீண்டும் இதே பிரச்சினை தொடர்வதால் உரிய தீர்வு காண வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments