சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஸ்ரீ வள்ளி மணவாளனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வீற்றிருக்கும் வள்ளி மணவாளனை தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து தரிசனம் செய்ய வேண்டும்.பின்னர்,அர்ச்சனை செய்து கொண்டு மாலையுடன் கோவிலை வலம் வந்தால் திருமணம்,பிள்ளை பேரு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்நிலையில், இக்கோவிலில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ வள்ளி மணவாளனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,இன்று 29-வது ஆண்டாக திருக்கல்யாண மகோத்சவ விழா நடைபெற்றது.மூலவர் கல்அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருக்கல்யாண மகோத்சவத்தை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ வள்ளி மணவாளனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.இதன்பின்னர், மகா அலங்காரம்,மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவ மகோத்சவம் நடைபெற்றது. மதியம் ஆனந்தன் குருக்கள் தலைமையில் 10 பேர் கொண்ட வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் நடைபெற்றது.இதன் பின்னர், மங்கள வாத்தியம் மற்றும் திருக்கயிலாய வாத்தியம் முழங்க சுவாமி ஆறுமுறை உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மயிலை சிறுவாபுரி பிரார்த்தனை குழுவினர் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில்,சென்னை காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments