• Breaking News

    தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க 'ஆபரேஷன் அறம்'..... டிஜிபி சங்கர் ஜிவால்

     


    தமிழ்நாடு டிஜிபி ஷங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க ஆபரேஷன் அறம் நடைபெற்றது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி டெய்லர் ராஜா 30 ஆண்டுகளுக்குப் பின் கைதாகி உள்ளார். கர்நாடகாவில் பதுங்கியிருந்த டெய்லர் ராஜாவை தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப்படை கைது செய்துள்ளது.

    அபுபக்கர் சித்திக் மீது தமிழகத்தில் 5 வழக்குகளும், கேரளாவில் இரு வழக்குகளும், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு வழக்குகளும் உள்ளன. 2-வது குற்றவாளி முகமது அலி, 1999ல் குண்டு வெடிப்பு சம்பவம் உள்பட 7 வழக்குகள் உள்ளன. இவர் ஆந்திராவின் கடப்பாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நீதிமன்ற காவலுக்குட்படுத்த வேண்டும். அதன்பிறகு, போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். ஆனால், முதற்கட்ட விசாரணையிலேயே, தலைமறைவாக இருந்தவர்கள் மளிகைக் கடை, தையல் கடை, துணிக்கடை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் செய்து வந்துள்ளனர். டெய்லர் ராஜா மட்டும் அல் உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது. மற்ற இருவருக்கும் எந்த அமைப்புடனும் தொடர்பில்லை.

    இந்த வழக்கில் தொடர்புடைய பெரும்பாலான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடையவர். பயங்கரவாத எதிர்ப்புப் படையில் 181 அதிகாரிகள் உள்ளனர். 2012 வரை அபுபக்கர் சித்திக் தொடர்ந்து குற்றங்களை செய்து வந்தார். கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம். பயங்கரவாத தடுப்புப்படை வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அபுபக்கர் சித்திக் வெடிகுண்டுகளை தயாரித்து வந்துள்ளான். அவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தங்கியிருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகளை தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஒரு வழக்கில் 150 அல்லது 160 குற்றவாளிகள் இருக்கும் போது, 2 அல்லது 3 பேர் ரொம்ப நாள் தலைமறைவாக இருந்தாலும், அது வெற்றிகரமான ஆபரேஷன் தான். அதேபோல, ஒரு வழக்கில் தொடர்புடைய 150 பேரும் தலைமறைவாக இருந்தால்தான் அந்த வழக்கில் தோல்வியடைந்து விட்டதாக அர்த்தம்.

    கடந்த 8 ஆண்டுகளாக தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் . வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    No comments