எந்த நிகழ்ச்சியிலும் என் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது...... தவெக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உத்தரவு......
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கி தனது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணிகளை விஜய்யின் உத்தரவின் பேரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தீவிரமாக செய்து வருகிறார். இதனிடையே த.வெ.க. நிகழ்ச்சிகளிலும், பேனர்களிலும் கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆகியோரின் புகைப்படங்களை த.வெ.க.வினர் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் த.வெ.க. நிகழ்ச்சிகளில் தலைவர் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கட்சியினருக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், "நமக்கு ஒரே தலைவர் த.வெ.க. தலைவர் விஜய்தான். வருகிற 2026 தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து தலைவர் விஜய்யை முதல்-அமைச்சர் அரியாசனத்தில் அமர வைப்பதே நமது குறிக்கோள். இதற்காக நம் ஒரே தலைவரான விஜய்யுடன் கைகோர்த்து தீவிரமாக களப்பணியாற்ற உறுதி ஏற்போம்.
த.வெ.க. நிகழ்ச்சிகளிலோ, விளம்பர பேனர்களிலோ, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்சி தலைவர் விஜய் புகைப்படம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்னுடைய படத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது. இதை ஏற்கனவே நான் நிர்வாகிகளிடம் வலியுறுத்தி இருக்கிறேன். மீண்டும் தற்போது நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இந்த கடிதத்தின் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன். மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மீண்டும் நான் சொல்லிக்கொள்வது மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய் என்பதை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவோம் என்பதுதான்" என்று தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் படத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
No comments