• Breaking News

    தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் 'நவராத்திரி கொலு' கொண்டாட்டம்..... பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

     


    தமிழ்நாடு, கவர்னர் மாளிகையில் வருகிற 22-ந்தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெறும் 'நவராத்திரி கொலு 2025' கொண்டாட்டங்களில் பார்வையாளர்களாக பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாடு, கவர்னர் மாளிகையில் 'நவராத்திரி கொலு 2025' செப்டம்பர் 22 (திங்கட்கிழமை) முதல் அக்டோபர் 1 (புதன்கிழமை) வரை கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, 22-ந்தேதி அன்று சென்னை, கவர்னர் மாளிகையில் தொடங்கி வைக்கவுள்ளார்.

    தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியிலும் மற்றும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் கலாசார நிகழ்ச்சி கொண்டாட்டங்களில் தனிநபர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம்.

    ஆர்வமுள்ள தனிநபர்கள், பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பின்வரும் இணையதள இணைப்பு https://tnrajbhavantour.tn.gov.in/navaratri/ மற்றும் QR குறியீடு பயன்படுத்தி வருகிற 20-ந்தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவுகளில் தங்களது பெயர், வயது, பாலினம், முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, மற்றும் வருகைக்கான முன்மொழியும் தேதி போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.

    'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 200 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு அவர்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ள தேதியையும், நேரத்தினையும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்படும். பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக, கவர்னர் மாளிகை இரண்டாம் நுழைவாயில் வழியாக வந்தடைய வேண்டும். தங்களுக்கு அனுப்பப்பட்ட உறுதிப்படுத்திய மின்னஞ்சலின் நகல் மற்றும் அசல் புகைப்பட அடையாளச் சான்றினை உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஆர்வமுள்ள வெளிநாட்டினரும் 'நவராத்திரி கொலு 2025' கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்; அவர்களின் அசல் கடவுச்சீட்டு மட்டுமே அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கான எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்கும் உரிமையை தமிழ்நாடு கவர்னர் மாளிகை கொண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments