• Breaking News

    தமிழகம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


     'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அவர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

    மேலும் அவர் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்களுடன் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரத்து 20 கோடி முதலீடுகளை ஈர்த்தார்.

    பின்னர் ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 2-ந்தேதி இங்கிலாந்து சென்றார். லண்டனில் முதலீட்டாளர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது 7 நிறுவனங்களுடன் ரூ.8 ஆயிரத்து 496 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின்போது தமிழ்நாட்டுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரத்து 516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்பினார். காலை 8.45 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    No comments