ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து மீனவர்கள் நாட்டுப்படகு ஒன்றில் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பினர்.
அப்போது நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் பல வகையான மீன்களுடன் அரிய வகையான மஞ்சள்வால் சூரை மீன் ஒன்று சிக்கி இருந்தது. வலையில் சிக்கியிருந்த இந்த சூரை மீன் சுமார் 112 கிலோ எடையும், 3 மீட்டர் நீளமும் இருந்தது. இந்த பெரிய மீனை 4 மீனவர்கள் சேர்ந்து கரைக்கு தூக்கி வந்தனர். தொடர்ந்து மஞ்சள் வால் சூரை மீனை கேரளாவில் உள்ள வியாபாரி ஒருவர் ரூ.17,000-க்கு வாங்கி சென்றார்.
இதுகுறித்து நாட்டுப்படகு மீனவர்கள் கூறும்போது, மஞ்சள் வால் சூரை மீன் மிகவும் ஆழ்கடல் பகுதியில்தான் காண முடியும். குறிப்பாக அட்லாண்டிக் கடல் பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் மிக ஆழமான பகுதியில் இந்த மீன்களை காணலாம். வலைகளில் சிக்குவது மிக அரிதாகும் என்றார். வலையில் சிக்கிய மஞ்சள்வால் ராட்சத சூரை மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

0 Comments