திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் மாத உண்டியல்கள் எண்ணும் பணி செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.
தக்கார் அருள்முருகன் தலைமை வகித்து, உண்டியல் எண்ணும் பணியை பார்வையிட்டார். இணை ஆணையர் ராமு முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் செந்தில்குமார், ஆறுமுகம், நாகவேல், கண்காணிப்பாளர் கோமதி, ஆய்வர் செந்தில்நாயகி, தக்காரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்களின் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோர் இந்த பணியில் கலந்து கொண்டனர்.
உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அதன்படி உண்டியல் எண்ணிக்கையில் ரூ.4 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 507, (ரூ.4,26,22,507), தங்கம் 1 கிலோ 279 கிராம், வெள்ளி 30 கிலோ 857 கிராம், பித்தளை 46 கிலோ 312 கிராம், செம்பு 7.77 கிலோ, தகரம் 8.91 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1421-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.
வெள்ளி செயின்: உண்டியல் எண்ணிக்கையில் பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியிருந்த முருகர், விநாயகர், அம்மன் உருவம் பொறித்த 54 வெள்ளி நாணயங்கள் கோர்த்த இரண்டு அடுக்கிலான காசுமாலை ஒன்றும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments