243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு கடந்த 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முதல்கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடந்து முடிந்தது. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 2-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.இந்நிலையில், பீகாரின் பாட்னா நகரில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, பிரதமர் மோடி பல கூட்டங்களை நடத்தினார். குறைந்தபட்சம் அடுத்த 5 ஆண்டுகளில் பீகாரை அவர் எப்படி முன்னுக்கு கொண்டு செல்வார் என்பதற்கான வழிகாட்டியை எங்களுக்கு தர வேண்டும்.
அவர் தற்போது எல்லா வகையான பாடல்களையும் பாடி வருகிறார். அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. எந்த வெப்சீரிஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கிறாரோ? தெரியவில்லை. ஆனால், தேஜஸ்வியோ வேலைவாய்ப்புகளை வழங்கி கொண்டிருக்கிறார்.சாம்ராட் சவுத்ரி, திலீப் ஜெய்ஸ்வால், மங்கள் பாண்டே போன்றோரின் ஊழல் மற்றும் மோசடிகளை பிரதமர் மோடி பார்க்கவில்லை. அவர்களை நோக்கி அவர் ஏதேனும் கேள்வி கேட்டிருக்கிறாரா? அவர்களை யாரும் கேள்வி கேட்டதில்லை என்றார்.
பீகாரில் உள்ள முக்கிய குற்றவாளிகளுடன் பிரதமர் மோடி மேடையை பகிர்கிறார். ஆனந்த் சிங், உல்லாஸ் பாண்டே, ராஜவல்லப், மனோரமா தேவி, ஆனந்த் மோகன் மற்றும் சுனில் பாண்டே ஆகியோர் மிக நல்ல மனிதர்களா? நீங்கள் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால், உங்களுடைய பாவங்கள் கழுவப்பட்டு விடும். கங்கையில் குளிக்கும்போது பாவங்கள் கழுவப்படுமோ, இல்லையோ... ஒருவர் என்ன வேண்டுமென்றாலும் செய்து விட்டு, பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால் அவர்களின் பாவங்கள் கழுவப்படும் என்று கூறியுள்ளார்.

0 Comments