கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு..... கொழுந்தனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி

 


மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள பத்னாபூர் தாலுகா சம்தானா கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்வர். இவரது மனைவி மனிஷா (25 வயது). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பரமேஸ்வர் கடந்த மாதம் திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. கணவர் காணாமல் போய் விட்டதாக மனிஷா போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள அணையில் இருந்து ஒரு ஆணின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் அது பரமேஸ்வரின் உடல் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். இதில் கணவர் காணாமல் போய் விட்டதாக புகார் கொடுத்த மனிஷாவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில் மனிஷாவுக்கும், அவரது கணவரின் இளைய சகோதரர் தியானேஸ்வருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. பரமேஸ்வர் இவர்களின் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது கள்ளக்காதல் ஜோடிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தங்கள் உறவுக்கு தடையாக இருக்கும் பரமேஸ்வரை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டினர்.

அதன்படி கடந்த மாதம் 15-ந்தேதி இரவு தியானேஸ்வர் தனது அண்ணனை தலையில் கல்லால் தாக்கி உள்ளார். மனிஷா ஒரு துணியால் அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இருவரும் உடலை ஒரு பாலித்தீன் பையில் சுற்றி, அதில் கல்லை கட்டி அணையில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மனிஷாவையும் அவரது கொழுந்தனான தியானேஸ்வரையும் கைது செய்தனர்.

Post a Comment

0 Comments