திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் சுமார் 4,560 அடி உயரத்தில் அமைந்துள்ள பர்வதமலை மீது மல்லிகார்ஜுனேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு பவுர்ணமி மற்றும் வார விடுமுறை தினங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.மலை மீதுள்ள ஏணிப்படி, கிடப்பார நெட்டு மற்றும் பிள்ளையார் நெட்டு, போன்ற பல்வேறு பகுதிகளில் பாதை மிகவும் குறுகலாக உள்ள காரணத்தால் பல்வேறு சமயங்களில் நெரிசல் தள்ளு முள்ளு ஏற்படுகிறது.
மேலும் பக்தர்கள் மயக்கம் ஏற்பட்டு விழுந்து இறந்து விடும் சம்பவங்களும் நடக்கின்றன. இளைஞர்கள் கஞ்சா மறைத்து எடுத்து வந்து மலை மீது பயன்படுத்துவதாகவும் புகார்கள் வருகின்றன.இதனை தொடர்ந்து வனத்துறையினர் மலை அடிவாரத்தில் அவ்வப்போது சோதனை செய்யும் போதும் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.
இது சம்பந்தமாக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பர்வதமலை ஏறும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதியும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி தினமும் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 நபர்கள் என்ற அளவில் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், நடக்க இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

0 Comments