தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று (ஞாயிறு) நடைபெற்றது, இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, முருகருக்கு சிறப்பு பூஜைகள், கணபதி ஹோமமும், தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணமும் நடைபெற்றது திருக்கல்யாணத்தை கணேசசிவாச்சாரியார், ஈஸ்வரன் சர்மா நடத்தி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக ஊட்டி திருக்குந்த சபை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
மதியம் உச்சிக்கால பூஜை, பக்தர்கள் எடுத்து வந்த பால்குடங்கள் மூலம் முருகருக்கு சிறப்புஅபிஷேகம் நடைபெற்றது. மாலையில் கோவில் அடிவாரத்தில் மகா சரவண ஜோதி ஏற்றப்பட்டது. இரவில், முத்து மாலைபுரம் ஆதி நாராயணன் சந்திரலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பக மாணவர்கள் மற்றும் வள்ளியம்மாள்புரம் திருமுரு கன்உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவில் பாவூர்சத்திரம், கடையம், சுரண்டை, தென்காசி, ஆலங்குளம், சுரண்டை, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். காலை 7 மணி முதல் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை 62 ஆண்டுகளாக இறைப்பணி செய்து வரும் பரம்பரை அறங்காவலர் ஆதிநாராயணன் குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தென்காசி, பாவூர்சத்திரம், கடையம், ஆலங்குளம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் செய்தார்.

0 Comments