காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா



 காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் திருவிழா கடந்த 10ந்தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள், தினந்தோறும் பால்குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நேற்று இரவு முத்தாலம்மன் கோவிலில் இருந்து கோவில் கரகம் மற்றும் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும், மதுக்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட விழா இன்று நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குடம் எடுத்த போது அதிகாலை முதல் சாரல் மழை அவ்வப்போது பெய்து பக்தர்களை குளிர்வித்ததால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

காலை 10.30 மணிக்கு கோவில் எதிரே பூக்குழி அமைக்கப்பட்டு கோவில் காவடி முதலில் பூக்குழி இறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள், அலகு குத்தி வந்த பக்தர்கள் என ஏராளமானோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குட விழாவையொட்டி காரைக்குடி நகர் முழுவதும் அன்னதானம் மற்றும் தண்ணீர் பந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று மாலையில் மது, முளைப்பாரி, கரகம் ஆகியவை பருப்பூரணியில் கரைத்தல் நிகழ்ச்சியும், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை இரவு அம்பாள் திருவீதி உலாவும், மறுநாள் இரவு சந்தனகாப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments