திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு சவுந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. பொன்னேரியின் மையப்பகுதியில் ஆரணி ஆற்றங்கரையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சோழ மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டது.
சைவ சமயத்தினருக்கும் வைணவ சமயத்தினருக்கும் யார் பெரியவர் என்ற மோதல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த மோதலை போக்க பரத்வாஜ முனிவர், அகத்திய மாமுனி ஆகியோர் கரிகிருஷ்ண பெருமாளும், சிவபெருமானும் ஒருசேர காட்சியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து ஹரியும் ஹரனும் ஒன்றே என உலகத்திற்கு உணர்த்தும் விதத்தில் பொன்னேரியின் பிரதான மாடவீதியில் சிவனும் பெருமாளும் ஒன்றாக பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நீண்ட நெடுங்காலமாக நடந்து வரும் சந்திப்பு திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் சௌந்தரவல்லி தாயாருக்கும் கரிகிருஷ்ண பெருமாளுக்கும் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. கரிகிருஷ்ண பெருமாள் பல்வேறு வாகனங்களில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து கருடோற்சவத்தின் 5ஆம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக இந்தியாவிலேயே வேறு எங்கும் நடைபெறாத ஹரிஹரன் சந்திப்பு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் ஆனந்தவல்லி தாயார், விநாயகர், முருகர் மற்றும் சன்டிகேஸ்வரருடன் அகத்தீஸ்வரர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பக்தர்கள் புடைசூழ சந்திப்பு திடலான ஹரிஹரன் கடைவீதிக்கு வந்தடைந்தார். இதே நேரத்தில் கரிகிருஷ்ண பெருமாள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு கருட வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்து மேளதாளம் முழங்க அங்கு வந்து சேர்ந்தார். மிகவும் பிரம்மாண்டமாக கண்ணை கவரும் விதத்தில் வான வேடிக்கை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பட்டாச்சார்யார்கள் சிவபெருமானுக்கு சீர்வரிசை கொண்டு வந்து கொடுத்தனர். இதையடுத்து சிவாச்சாரியார்கள் கரிகிருஷ்ண பெருமாளுக்கு சீர்வரிசை அளித்தனர். விழாவின் உச்சகட்டமாக ஹரியும் ஹரனும் பக்தர்களுக்கு ஒன்றாக காட்சியளித்தனர்.
அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷமும் நமச்சிவாய, நமச்சிவாய கோஷமும் விண்ணை பிளக்கும் வகையில் அதிர்ந்தது. கோலாகலமாக நடந்த சந்திப்பு பெருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும் சிவபெருமானையும் ஒருசேர கண்டு களித்தனர். பின்னர் சிவனும் பெருமாளும் ஒன்றாக வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த சந்திப்பின் போது விண்ணை தொடும் அளவிற்கு வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் முன் பாம்பு சீறிய பட்டாசு கண்டு பரவசம் அடைந்தனர். சந்திப்பு உற்சவ வைபவம் முடிந்ததும் சிவனும் பெருமாளும் வீதி உலா சென்று தத்தமது ஆலயம் திரும்பினர்.



0 Comments