பொன்னேரியில் அருள் பாலிக்கும் ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தின் தெப்ப உற்சவ திருவிழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பொன்னேரி திருவாயர்பாடியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலயத்தின் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி தினந்தோறும் ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் சிம்ம, அனுமந்த, புன்ன, அன்ன, வாகனத்தில் எழுந்தருளி முக்கிய மாட வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான ஹரிஹரன் சந்திப்பு திருவிழாவும், தேர் திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றன. பிரம்மோற்சவத்தின் பதினோராம் நாளான நேற்று இரவு ஆலயத்தின் புஷ்கரணியில் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவை பகலாய் மாற்றிய வான வேடிக்கைகளுடன் புஷ்கரணியை மூன்று முறை வலம் வந்த தெப்பலை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பரவச நாமத்துடன் வழிபட்டனர். தெப்ப உற்சவ திருவிழாவையொட்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து எம்பெருமானை வழிபாட்டு சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

0 Comments