விஜய் ஒரு புதிய வரலாறு படைத்திருக்கிறார்,ரொம்ப சந்தோஷமாக உள்ளது..... பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரி மகள் கயல்விழி பேட்டி.....

 


தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் இன்று (மே10) முதல்வராக பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் விழாவில் மு.க.அழகிரியின் மகளும் கலைஞரின் பேத்தியுமான கயல்விழி கலந்துகொண்டார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜய் ஒரு புதிய வரலாறு படைத்திருக்கிறார். ரொம்ப சந்தோஷமாக உள்ளது. மேலும் மேலும் அவர் நல்லது செய்ய வேண்டும் ரொம்ப ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறேன். ஒரு இளைஞர் வந்திருக்கிறார். நிச்சயமாக நல்லது செய்வார் என நூறு சதவீதம் நம்புறேன்.

ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கேன் என விஜய் கூறுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “நிஜமாகவே ரொம்ப கஷ்டப்பட்டு போராடி ஜெயித்திருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். அது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. அவரோட போராட்டத்துக்கு நிச்சயமாக நல்லது நடக்கும். தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்கும் அவருடைய தோழமைக் கட்சிகள் எல்லோருக்கும் அதுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.தேர்தலுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கயல்விழி, “திமுகவுக்கு எதிராக நான் பேசவில்லை. கூட்டணி பலமும், பெரிய அளவுக்கான எதிர்ப்பற்ற தன்மையும் திமுகவை திரும்பவும் ஆட்சிக்குக் கொண்டு வருவது போல்தான் இருந்தது. ஆனால் விஜய் வந்த பிறகு நிலைமையே வேறு. களத்தில் விஜய் விளையாடுகிறார். கணிசமான வாக்குகளை விஜய் பிரிப்பார். திமுக அவரை குறைத்து எடைபோடுகிறது.

அவர் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் வெற்றியை தவிடுபொடியாக்கும். விஜய்யால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத தொங்கு சட்டசபை கூட அமையலாம். இந்த சூழலில் அப்பாவையும், சீனியர் நிர்வாகிகளையும் அனுசரித்து, அவர்களுடைய அனுபவத்தைப் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் வெற்றி பெற நினைக்க வேண்டும். அதை செய்யாமல் சர்வாதிகாரமாக செயல்படுவது திமுகவின் வெற்றியை நிச்சயம் பாதிக்கும். இந்த ஆதங்கம் திமுக சீனியர்களிடமும் உள்ளது” என தெரிவித்திருந்தார்.இந்நிலையில் விஜய்யின் இன்றைய பதவியேற்பு விழாவில் கலைஞர் குடும்பத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட யாரும் பங்கேற்காத நிலையில் கயல்விழி மட்டும் பங்கேற்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

Post a Comment

0 Comments