திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில், அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்த மக்கள் நிரந்தர பட்டா வழங்கிட வலியுறுத்தி ஜமாபந்தி அலுவலரிடம் மனு அளித்தனர். அத்திப்பட்டு ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் கதிர்வேல் தலைமையில் கிராம மக்கள் பட்டா வழங்க கோரி ஜமாபந்தி அலுவலர் சுரேஷிடம் மனு அளித்தனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு அசைன்மெண்ட் பட்டா வழங்கப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக நிரந்தர பட்டா வழங்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் முறையிட்டு வருவதாகவும் அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் வெள்ளத்தில் தத்தளித்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், தங்களது குடியிருப்பு பகுதியில் மழை நீர் வடிகால் வசதியை முறைப்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஆட்சிகளில் பட்டா கேட்டு விண்ணப்பித்து நடவடிக்கை எடுக்காத நிலையில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியிலாவது தங்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வீடு இல்லாமல் வசித்து வரும் பலருக்கு இடம் வழங்கி அரசு வீடு கட்டி தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.


0 Comments