நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கண்ணி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக துணை செயலாளராக உள்ளார் . இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிந்தாமணி அரசு நியாய விலை கடையில் விற்பனையாளராக பணிபுரியும் வெண்மணி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு வெண்மணி என்பவர் அரசு பணியில் இருந்து கொண்டு தவெக கட்சிப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிக்கு புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக நிர்வாகியான ரவிச்சந்திரன் கடந்த ஜூலை 15ஆம் தேதி மேலப்பிடாகை பகுதியில் டிபன் வாங்க வந்த போது வெண்மணி மற்றும் அவரது சகோதரர்களான சிவராமன் மற்றும் ராஜா ஆகிய மூவரும் ரவிச்சந்திரனை இரும்புக் கம்பி, பிளாஸ்டிக் டப்பி போன்ற பொருட்களால் தாக்கிய நிலையில் அவர் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில், வெண்மணி உட்பட மூவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் இதே போல ரவிச்சந்திரன் மீதும் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மூவரை கைது செய்யாமல் காவல்துறையினர் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி உறவினர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர். வெண்மணி உடல் நிலை சரியில்லாமல் போலீசார் பாதுகாப்பில் இருந்த போது தப்பியதாகவும் அங்கிருந்து கூறப்படுகிறது.
இதற்கு போலீசார் அலட்சியமே காரணம் எனக்கூறி திமுக நிர்வாகி ரவிச்சந்திரனின் உறவினர்கள் மற்றும் திமுகவினர் நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் மேலப்பிடாகை கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் அன்பழகன் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்




0 Comments