காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தைக் கண்டித்தும் கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஓசூரிலேயே நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைக் கண்டித்து, கர்நாடக-தமிழக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் ‘கன்னட ஜாக்ருதி வேதிகே’, ‘கன்னட ரக்ஷண வேதிகே’ உள்ளிட்ட அமைப்புகள் இன்று (ஜூலை 26) சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.இந்த போராட்டத்தின் எதிரொலியாக, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அதிகாலை முதலே பெங்களூரு செல்லும் அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
தர்மபுரி மண்டல அரசுப் போக்குவரத்து கழகத்தின் அறிவுறுத்தலின்படி, மறு உத்தரவு வரும் வரை எல்லை தாண்டிப் பேருந்துகள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகப் பேருந்துகள் ஓசூருடன் நிறுத்தப்பட்டதால், பெங்களூரு செல்ல வேண்டிய பயணிகள் எல்லையிலேயே இறக்கி விடப்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுவதால், அசம்பாவிதங்களைத் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேசமயம், கர்நாடக மாநில அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் வழக்கம்போல இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments