அன்பில் மகேஷ் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

 


கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி.அரசகுமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுவரை 177 புகார்கள் இந்த வழக்கில் பெறப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 16) காலை முதல் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்தது தொடர்பான வழக்கில் சென்னை மற்றும் திருச்சியிலுள்ள இடங்களில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.

தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu-இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய B.T.அரசகுமார், என்பவரை 27.06.2026 அன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் விரிவான முறையில் விசாரணை மேற்கொண்டு, இதுவரை, 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு. பள்ளிக் கல்வித்துறை மற்றும் அலுவலகங்களைச் சேர்ந்த பல்வேறு அரசு அலுவலர்களும் விசாரணை செய்து, அதன் தொடர்புடைய அரசு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுவரை, 177 பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் தொகை வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி செய்ததாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. மேலும் புகார்கள் தொடர்ந்து பெறப்பட்டு, நிதி மோசடி தொடர்பான விசாரணையின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடைய நபர்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன

இவற்றில் A1 அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 20 வங்கிக் கணக்குகள் மற்றும் A2 முத்துக்குமாருடன் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளில் நிதிப் பரிவர்த்தனைகள் அதன் தொடர்பான சரிபார்ப்பு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இவர்களது குடியிருப்புகள், அமைந்துள்ள DPI வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல கட்டங்களாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கண்ட சோதனைகளின்போது, குற்றச்செயலுடன் தொடர்புடைய ஆவணங்கள், தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள், அரசு அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்ட மனுக்கள்/பிரதிநிதித்துவ ஆவணங்கள், நிதி தொடர்பான பதிவுகள், கைபேசிகள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் இதர டிஜிட்டல்/மின்னணு ஆதாரங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரின் பங்கு, நிதிப் பரிவர்த்தனைகள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களுக்கிடையிலான தொடர்புகள் ஆகியவை பெருநகர சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவினால் சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக, சாட்சிகளின் வாக்கு மூலங்கள். ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, இவர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் திருச்சியிலுள்ள மொத்தம் 4 இடங்களிலும், இவரது உதவியாளரான வாலாடி கார்த்திக் என்பவருக்கு சொந்தமான சென்னை மற்றும் திருச்சி 2 இடங்களிலும் இன்று (16.09.2026) காலை முதல் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments