இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் 70 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி 1.50 கோடி ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்த பெண் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஹரிந்தர் பால் சிங். இவர் ஹரியாணா மாநிலத்தில் pal Aqua என்ற பெயரில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக 70 கோடி ரூபாய் பணம் தேவைப்பட்டதாகவும் அப்போது தனது நண்பர் மூலம் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர் என்ற எஸ்.ஆர் தேவர் என்பவர் அறிமுகமாகி 70 கோடி கடன் பெற்று தருவதற்கு முத்திரைத்தாள் செலவு கமிஷன் என 1.40 கோடி ரூபாய் முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என கூறியதாக தெரிவித்துள்ளார்.
![]() |
பறிமுதல் செய்த பனம் |
இதனை நம்பி ராஜசேகர் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் பணத்தை ரொக்கமாக அளித்ததாகவும் பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள் சொன்னபடி கடன் பெற்றுக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பல முறை சென்று அவர்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பி தருமாறு கேட்ட போது மிரட்டல் விடுப்பதாகவும் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பணத்தை மீட்டு தரவேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரில் பேரில் மத்திய குற்றப்பிரிவு மோசடி பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர், சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ரஜிதா என்ற ரேஷ்மின், கேகே நகரை சேர்ந்த ராமு, தசரதன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தொழிலதிபர் ஹரிந்தர் பால் சிங்கிடம் 70 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி 1.40 கோடி ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
![]() |
பறிமுதல் செய்த கார் |
மேலும் போலியான முத்திரைத்தாள் மற்றும் முத்திரைகளைப் பயன்படுத்தி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து 1.10 கோடி பணம், 2 சொகுசு கார், செல்போன், போலி முத்திரைத்தாள் மற்றும் முத்திரைகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment