ஊட்டி: 126-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது - MAKKAL NERAM

Breaking

Friday, May 10, 2024

ஊட்டி: 126-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது

 

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 126-வது மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. வழக்கமாக மலர்கண்காட்சிக்கு கவர்னர் அல்லது தமிழக முதல்-அமைச்சர் ஆகிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் வந்து விழாவை தொடங்கி வைப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், முக்கிய பிரமுகர்கள் யாரும் வரவில்லை. மலர் கண்காட்சியை அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தொடங்கி வைக்கிறார்.இந்த ஆண்டு, விழாவின் சிறப்பு அம்சமாக 60 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம் போன்ற மலர்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

விழாவின் முக்கிய அம்சமாக ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரெயில் உருவமும், சுட்டி குழந்தைகளை கவரும் வகையில் டிஸ்னி வேர்ல்ட் உருவமும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பூங்காவில் வண்ண மலர்த் தொட்டிகள் பல வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையிலும் மலர் செடிகள், அரிய வகை தாவரங்கள் உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக 5 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி இந்த முறை 10 நாட்கள் நடப்பதால் பூந்தொட்டிகள் மற்றும் மலர் செடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் புகழ்பெற்ற ரோஜா கண்காட்சியும் இன்று நடக்கிறது.

மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment