• Breaking News

    ரூ.770 தவணை செலுத்த தவறிய பெண்ணை சிறை பிடித்த ஐடிஎஃப்சி வங்கி ஊழியர்கள்

     

    சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள துக்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் ஐடிஎஃப்சி என்ற தனியார் வங்கி மூலம் ரூ.35 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு வாரம் தோறும் ரூ.770 வீதம் 52 வாரங்களுக்கு தவணை தொகை செலுத்த வேண்டும். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக பிரசாந்தால் தவணை தொகையை செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பிரசாந்த், அவரது மனைவி மேலும், பிரசாந்த் இன்னும் 10 தவணை செலுத்தினால் கடன் முடிந்து விடும் என்ற நிலையில், ஐடிஎஃப்சி வங்கியின் ஊழியர் சுபா, என்பவர் நேற்று தவணை தொகை செலுத்தாது தொடர்பாக பிரசாந்த்தை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், வேலையில் இருந்த நிலையில் பிரசாந்த்தால் செல்போனை எடுக்க இயலவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து துக்கியம்பாளையம் பகுதியில் உள்ள பிரசாந்த்தின் வீட்டிற்கு சென்ற சுபா மற்றும் வங்கி ஊழியர்கள் வீட்டிலிருந்த பிரசாந்தின் மனைவி கவுரி சங்கரியிடம் கடன் குறித்து கேட்டுள்ளனர்.

    அப்போது கவுரி சங்கரி தனது கணவர் பணிக்கு சென்றிருப்பதாகவும் அவர் வந்த உடன் வங்கி ஊழியரை தொடர்பு கொள்ள சொல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத வங்கி ஊழியர்கள் கவுரி சங்கரியை வங்கிக்கு வருமாறும், தவணை தொகையை செலுத்திவிட்டு, உங்கள் கணவர் அழைத்துச்செல்லட்டும் என கூறி வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே நடந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சி அடைந்த பிரசாந்த், பிறரிடம் கடன்பெற்று தவணை தொகையை வங்கியில் செலுத்தி பின்னர் தனது மனைவியை மீட்டுள்ளார். கணவர் கடன் தொகையை செலுத்தாததால் மனைவியை தனியார் வங்கி நிர்வாகத்தினர் சிறைபிடித்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடன் விவகாரத்தில் எல்லை மீறி நடந்துகொண்ட வங்கி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments