• Breaking News

    சபரிமலையில் இனி ஆன்லைன் முன்பதிவு செய்தால் மட்டுமே தரிசிக்க முடியும்

     

    பல லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் சபரிமலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை எந்தவித சிக்கல்களும் இல்லாமல் தரிசனம் செய்து வந்தனர். ஆனால், அங்கு முன்பதிவு முறை கொண்டுவரப்பட்டபின் சிக்கல்கள் எழுந்தன. அதிலும் உடனடி முன்பதிவு செய்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டதால் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

    இதனால் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிறியவர் முதல் பெரியவர் வரை மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். மேலும் பக்தர்கள் 15 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய நேர்ந்தது. கூட்ட நெரிசலில் பக்தர்கள் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது. இதனால் பல பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமலேயே திரும்பி சென்றனர்.

    இந்த சம்பவங்கள் கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது.

    இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு சபரிமலையில் ஏற்பட்ட கூட்டநெரிசல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  அதுகுறித்து தேவஸ்தான தலைவர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அப்போது அவர், "சபரிமலையில் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களுக்கு  கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, இனி வரும் சீசன் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.  உடனடி முன் பதிவு முறை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.

    இதனால் வரும் ஆண்டில் சிரமமின்றி ஐயப்பனை வழிபட முடியும் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    No comments