• Breaking News

    நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு..... 24 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.....

     

    நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட  இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை,  நீட் நுழைவுத் தேர்வுகளின்  அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதனால் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வை  கட்டாயம் எழுதியாக வேண்டும்.

    அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு, இன்று நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 9-ம் தேதி முதல்  ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும்  24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். இதில்  தமிழகத்தில் 12,730 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம்  1.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.நாடு முழுவதும் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.  பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை மொத்தம் 3 மணி 20 நிமிட நேரத்துக்கு தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 180 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். 

    தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என்றாலும், மாணவர்கள் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்றும், கடைசி நேர பதற்றங்களைத்  தவிர்க்க, மாணவர்கள் முன்கூட்டிய வீடுகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு புறப்பட வேண்டும் என்றும் தேசிய தேர்வுகள் முகமை அறிவுறுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும்,  தேர்வு நடைமுறைகள் தொடர்பாக,  https://neet.ntaonline.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

    No comments