• Breaking News

    ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன்..... கொள்ளைக்காரனாக மாறிய பட்டதாரி...... திருமணம் முடிந்து பத்து நாட்களே ஆன புது மாப்பிள்ளை கைது......


    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புறநகர் பகுதியான மேகனா பள்ளி சாலையில் கடந்த வியாழக்கிழமை காலையில் வாக்கிங் சென்ற மலர்கொடி என்ற 60 வயது மூதாட்டி இடம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் செயின் பறித்து சென்றார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டை கழட்டி விட்டு வந்ததால் குற்றவாளி குறித்து கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. 

    காவல்துறை உதவியாளர் இளையராஜா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு மயிலாடுதுறை பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடித்தனர். குற்றவாளி ஆடுதுறையைச் சேர்ந்த விஜயபாலன் என்பதும் பிஇ சிவில் இன்ஜினியரிங் படித்த பட்டதாரியான இவர்  தனது மாமாவின் கடையில் உதவி செய்து வந்ததும், ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் கடன் காரணமாக, கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்ட போது அதனை சமாளிக்க செயின் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. விஜயபாலனுக்கு திருமணம் நடைபெற்று 10 நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் செம்பனார்கோவில் பகுதியில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

     இவர் மீது மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் நாகப்பட்டினம் தஞ்சை மாவட்டங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட விஜயபாலனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    No comments