கும்மிடிப்பூண்டி: பெரியகுப்பத்தில் 8கோடி மதிப்பிலான மீன் இறங்கு தளம் திறப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு பால் வளம் மற்றும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மீன் இறங்கு தளம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் காணொளி காட்சி மூலம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளை சிரமின்றி கடலுக்கு கொண்டு சென்று வரவும், படகுகளை பாதுகாப்பாக வைக்கவும், மீன்களை சுகாதாரமான முறையில் கையாளவும், மீனவர்கள் தங்கள் வலைகளை பின்னி பயனடையவும் கால்நடை பராமரிப்பு பால் வளம் மற்றும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் கட்டப்பட்டது.
இந்த மீன் இறங்கு தளத்தின் திறப்பு விழா திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக அரங்கில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சுண்ணாம்புகுளம் பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற விழாவில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி எம்பி சசிகாந்த்செந்தில் , கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ கோவிந்தராஜன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி மீன் இறங்கு தளத்தை திறந்து வைத்ததோடு, மீன் இறகு தளத்தையும் பார்வையிட்டனர்.
தொடந்து தமிழக அரசால் மீனவர்களுக்கு கட்டித் தரப்பட்ட இந்த மீன் இறங்கு தளத்தை முறையாக பராமரித்து உரிய முறையில் பயன்படுத்தி தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.
இந்த விழாவில் சுண்ணாம்புகுளம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.எம்.ரவி, திமுக மாவட்ட துணை செயலாளர் எம்.எல்.ரவி, மாவட்ட பொருளாளர் எஸ்.ரமேஷ், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பரிமளம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், திமுக நகர செயலாளர் அறிவழகன், காங்கிரஸ் மாநில செயலாளர் எம்.சம்பத், மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments