• Breaking News

    பழவேற்காட்டில் உலக கடல் ஆமைகள் தினத்தை முன்னிட்டு,"கடல் ஆமைகளின் அறிவியல், நிலைத்தன்மை மற்றும் சமூகத்தைப் பாதுகாத்தல்"குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் இயங்கிவரும் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியின் பழவேற்காடு,கழிமுக உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் (PEBRC) உலக கடல் ஆமைகள் தினத்தை முன்னிட்டு கடல் ஆமைகளின் அறிவியல், நிலைத்தன்மை மற்றும் சமூகத்தைப் பாதுகாத்தல்"எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை (REEF) இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கத்தில் முதற்கட்டமாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது.REEF ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தலைவர் டாக்டர் ப.சிற்றரசு வரவேற்புரை ஆற்றினார்.தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் திட்ட அலுவலர் டாக்டர்.கே. முத்துக்குமார் தலைமையுரையாற்றினார்.

    கொச்சின்,CMLRE,ஆமை பாதுகாப்பு அறிவியல் விஞ்ஞானி டாக்டர்.மது மகேஷ் கடல் ஆமைகள் குறித்த விளக்கப்படங்களுடன் கடல் ஆமைகளின் வகைகள்,இந்தியாவில் அதன் வாழ்விடங்கள், இனப்பெருக்கம் மற்றும் கடற்கரையில் முட்டை இடுதல், குஞ்சு பொரித்தல்,ஆமைகளின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளித்தார்.

    சமூகம் மற்றும் ஆமை பாதுகாப்புக்கான தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதி மற்றும் REEF திட்ட இயக்குனர், டாக்டர் எஸ். ராமச்சந்திரபிரபு திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அளவில் கடல் ஆமைகளை பாதுகாப்பதற்க்கு முன்னெடுத்துள்ள செயல்பாடுகள் குறித்தும், கடற்கரை பகுதியில் உள்ள மீனவ மக்களோடு இணைந்து கடல் ஆமைகளை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.REEF பொருளாளர் டாக்டர் ஏ.வினோத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார்.

     இந்த கருத்தரங்கத்தில் பழவேற்காடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள்,திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம்,தமிழ்நாடு மீனவர் சங்கம் உள்ளிட்ட மீனவ சங்கங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள்,பள்ளி மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள்,பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    No comments