அதிமுக வேட்பாளர்கள் தேர்வு..... எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்றும், நாளையும் மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டிருந்த அறிக்கையில், "அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 29., 30 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள்; மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேற்கண்ட ஆலோசனைக் கூட்டங்களில், மாவட்டப் பொறுப்பாளர்களும்; மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. முக்கியமாக மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் தேர்வு குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவுக்கு இரண்டு இடங்கள் கிடைக்கும் நிலையில், தேமுதிக கோரியபடி ஒரு இடம் வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும் இன்று காலை, மாலை என நடைபெறும் கூட்டத்தில் 42 மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments