• Breaking News

    திருக்குவளை அருகே 200 ஏக்கர் வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிப்பு..... அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என விவசாயிகள் வேதனை......


    மேட்டூர் அணையில் ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி கடைமடை ஆன நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு முழுமையாக வந்து சேரவில்லை என விவசாயிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு பாசன நீர் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக சென்று சேர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

    இருப்பினும் திருக்குவளை அருகே சித்தாறு பாசனம் மூலம் பாசன வசதி பெறும் சுந்தரபாண்டியம் வாய்க்காலுக்கு பாய்ந்த தண்ணீர் வயலுக்கு முழுமையாக வந்து சேராத காரணத்தால் அப்பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல் மணிகள் முளைக்காமல் வீணாகி வருகிறது.  இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

     நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் பாயாமல் தரிசு வயல் போல் அவை காட்சியளிப்பதாகவும் நெல்மணிகள் வயலில் விதைப்பு செய்யப்பட்டு 20 நாட்களைக் கடந்தும் தண்ணீர் கிடைக்காததால் அவை மக்கி வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இப்பகுதிக்கு பாசன நீரை பெற்று தரும் சுந்தரபாண்டியம் பாசன வாய்க்காலுக்கு பாய வேண்டிய காவிரி நீர்  மதியுள்ளான் இயக்கு அணை மூலம் வடிகாலில்  வீணாக கடலுக்கு செல்வதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

    ஆகவே பாசனத்திற்கு பயன்பெறாமல் வடிகாலில் செல்வதை தடுத்து இந்த பகுதிக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும்  மதியுள்ளான் ஆற்றிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் உடைய சுந்தரபாண்டியம் பாசன வாய்க்கால் வழியாக இப்பகுதிக்கு தண்ணீர் பாய்வதில் சிக்கல் இருப்பதாகவும் ஆகவே வெள்ளையாற்றிலிருந்து, முட்டான்தோப்பு என்ற  பகுதி வழியாக சுந்தரபாண்டியம் பகுதிக்கு தனி பாசன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்

    No comments