• Breaking News

    தென் மாவட்டத்தில் பலத்தை நிரூபிக்க மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு.?

     


    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கூடினர். இது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, கட்சி கட்டமைப்பு பணிகளில் விஜய் தீவிரமாக இறங்கினார்.

    நகரம் தொடங்கி கிராமம் வரை கட்சிக்கு அனைத்து நிலை நிர்வாகிகளையும் த.வெ.க. நியமித்து முடித்துள்ளது. வார்டு, பகுதிகளுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. ஆயுத்தமாகி வருகிறது.

    இதனிடையெ தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் கடந்த ஜூலை 4ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, த.வெ.க. தலைவர் விஜய், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறைந்தபட்சம் ஒருவரை கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற இலக்கை அறிவித்தார். இது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கான முக்கிய முடிவாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    இதற்கு முன்னதாக, 2024 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது, இந்த முடிவு அதை மேலும் வலுப்படுத்துகிறது. அதைப்போல, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    ஆகஸ்ட் மாதம் 3-வது வாரத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, மற்றொரு மாநில மாநாட்டை நடத்துவதற்கும் இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதே போல, தமிழகத்தின் 10,000 கிராமங்களில் கட்சியின் கொள்கைகளை விளக்குவதற்காக சிறப்பு கூட்டங்கள் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

    இந்தக் கூட்டங்கள் மூலம் 50-60 லட்சம் வாக்காளர்களை அணுகி, த.வெ.க.வின் முக்கிய கொள்கைகளான சமத்துவம், மதச்சார்பின்மை, சமூக நீதி, மற்றும் ஜனநாயக உரிமைகளை பரப்புவதற்கு திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இந்த சூழலில் வடமாவட்டங்களில் கட்சிக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தென்மாவட்ட பகுதியில் த.வெ.க. கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் அங்கு கட்சியின் 2-வது மாநில மாநாட்டை ஆகஸ்டு மாத இறுதியில் நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் இடம் தேர்வு பணி நடந்து வந்தது.

    இதற்காக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். இதற்கிடையே, மதுரையில் மாநாடு நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான இடம் தேர்வுக்காக நிர்வாகிகள் நேரடியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    மதுரை மாநாட்டில் செப்டம்பர் மாத தனது சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார். முக்கிய பிரமுகர்களும் இந்த மாநாட்டில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என ஆதரவு தெரிவித்து அக்கட்சியினர் அப்பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டி வந்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், மதுரை மாநாட்டை த.வெ.க.வினர் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    No comments