பொன்னேரி அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளஹஸ்தீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா..... திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.....
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த நெற்குன்றம் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஞானபிரசன்னாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலையில் 4 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதேநேரத்தில் விநாயகர், முருகன், அம்பாள், லட்சுமி நாராயண சுவாமி சன்னதிகள் மீதும் புனிதநீர் ஊற்றப்பட்டது.
அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என கோஷமிட்டு சிவபெருமானை வணங்கினர். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments