நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் அர்ச்சனைக்கு தனி ஏற்பாடு செய்யப்பட்டு, உற்சவரான ஆறுமுகவேலவர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முன்னதாக சிறப்பு யாக பூஜை நடைபெற்றதுடன், அதனைத் தொடர்ந்து மூலவரான சுப்பிரமணியசுவாமிக்கு பால், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகை மட்டுமின்றி திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், இரவு வள்ளி தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்றது. பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் முழக்கத்துடன் வழியெங்கும் மலர் தூவியும் அர்ச்சனை செய்தும் தரிசனம் செய்தனர்.
திருக்குவளை நிருபர் த.கண்ணன்
0 Comments