அமைதியாய் நடைபெற்ற அமைச்சர் சேகர்பாபுவின் 60ம் கல்யாணம் - MAKKAL NERAM

Breaking

Saturday, October 7, 2023

அமைதியாய் நடைபெற்ற அமைச்சர் சேகர்பாபுவின் 60ம் கல்யாணம்

 


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தளத்தில் பக்தர்கள் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். 



இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு 60 வயது பூர்த்தி அடைந்து 61வது வயது தொடங்குவதை முன்னிட்டு சஷ்டியப்த பூர்த்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை கோவிலுக்கு வந்த சேகர் பாபு, அவரது மனைவி சாந்திக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அமைச்சர் தம்பதி சமேதராக கோபூஜை கஜ பூஜை செய்தனர். பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதல் கால யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து இன்று காலை சஷ்டியப்த பூர்த்தி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு அவரது மனைவி சாந்தி ஆகியோருக்கு கலசபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் சேகர்பாபு பட்டாடை சகிதமாக ஸ்ரீ சூரணம் திலகம் தரித்து மங்கள வாத்தியங்கள் முழங்க அவரது மனைவி  சாந்திக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு தம்பதியினர் சுவாமி அம்பாள் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். 

No comments:

Post a Comment