குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Monday, October 30, 2023

குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

 


கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.



கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில், சுமார் 2000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.



மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும், இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 52 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்  உள்ளதாக கூறப்படுகிறது.  நேற்று காலை 9.40 மணியளவில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில் அடுத்தடுத்த வெடித்தது “டிபன் பாக்ஸ் குண்டு” தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள டி.ஜி.பி தகவல் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, மாநிலத்தில் அமைதியை பாதுகாப்பது தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் தடுக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிது.


இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக ‘வெடிகுண்டு வைத்தது நான் தான்’ என்று கூறி கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்டின் என்பவர் போலீசாரிடம் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குண்டு வைத்ததை காவல்துறையினர் உறுதி செய்தனர்.



தற்போது, கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது உபா சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், குண்டு வெடிப்பு தொடர்பாக கேரளா முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குண்டு வெடித்த இடத்தில் NIA சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த அரங்கத்திற்கு சீல் வைத்த NIA அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வறுகின்றனர்.

No comments:

Post a Comment