• Breaking News

    ரூ.2.39 கோடி ஜி.எஸ்.டி வரி..... பெண் தூய்மை பணியாளரை அலறவிட்ட நோட்டீஸ்....

     


    ஆம்பூரில் பெண் தூய்மை பணியாளர் ஒருவருக்கு ரூ.2.39 கோடி ஜி.எஸ்.டி., வரியை கட்டக்கோரி வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரையடுத்து கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் ராணி பாபு(60). இவர் அங்குள்ள ஆலையில் தூய்மை பணியாளராக உள்ளார்.ராணி பாபுக்கு திருச்சி மாவட்டம் பாலக்கரை வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீசில், அவர் ரூ.2.39 கோடி ஜி.எஸ்.டி., வரி கட்ட வேண்டும் என்றும், 7 நாட்களுக்குள் அதை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.நோட்டீசை கண்ட ராணி பாபுவும், அவரது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நோட்டீசுக்கும், தமக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய அவர், இது குறித்து ஆம்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில், ஏழ்மையான பின்னணியில் தூய்மை பணியாளராக இருக்கும் ஒருவருக்கு எப்படி ரூ.2.39 கோடி ஜி.எஸ்.டி., வரி நோட்டீஸ் வந்திருக்க முடியும் என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு;

    திருச்சி மாவட்டம், கள்ளிக்குடி வடக்கு பகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சாலை மலைப்பட்டி பகுதியில் உள்ள நிறுவனத்தின் பெயர் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் ராணி பாபு. அதாவது, ராணி பாபுவின் பான்கார்டு, ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்டே நிறுவனம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்நிறுவனம் தான் வரிபாக்கியாக ரூ.1,07,50,284 வைத்துள்ளது. அதற்கு அபராதம் ரூ.1,07,05,294 மற்றும் வட்டித்தொகை ரூ.24,86,436 என மொத்தமாக ரூ.2,39,87,024 செலுத்த வேண்டும் என்று தான் நோட்டீஸ் வந்திருக்கிறது.ராணி பாபு பெயரில் நிறுவனம் உள்ள நிலையில், அவரது பெயரில் கேரள மாநிலம் எர்ணாகுளம் திருக்காட்கரை பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணபரிவர்த்தனைக்காக கணக்கு ஒன்றும் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வந்துள்ளது. ஜி.எஸ்.டி., வரி பாக்கியை செலுத்துமாறு ராணி பாபுவுக்கு கடந்த ஜூலை மாதமே கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மோசடி பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    No comments