தீபாவளிக்கு வருகிறது நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் ரயில்
தீபாவளி மற்றும் சாத் பண்டிகையை முன்னிட்டு நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கப்பட உள்ளது. 994 கி.மீ., தூரம் பயணிக்கும் இந்த ரயில் டில்லியில் இருந்து பாட்னா வரை செல்ல உள்ளது.அக்.,31 அன்று தீபாவளி பண்டிகை நாடு முழுதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதேபோல், வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் 'சாத்' பண்டிகையும் நவ., முதல் வாரத்தில் வருகிறது.
இதனை முன்னிட்டு, வெளியூரில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வர். அவர்கள் பயணம் செய்ய முதல் தேர்வாக ரயில் பயணம் இருக்கும். பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை அறிவிக்கும்.அந்த வகையில், தீபாவளி அன்று பயணிகளின் வசதிக்கு ஏதுவாக நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. டில்லியில் இருந்து பீஹார் தலைநகர் பாட்னா வரை இந்த ரயில் இயக்கப்படும். இரு நகரங்களுக்கு இடையிலான 994 கி.மீ., தூரத்தை 11.5 மணி நேரத்தில் கடந்து செல்லும்.இதற்கு முன்னர், டில்லி - வாரணாசி இடையில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் தான், நீண்ட தூரம் செல்லும் ரயில் என்ற பெருமை பெற்றது.
புதிதாக அறிமுகம் செய்யப்படும் டில்லி - பாட்னா வந்தே பாரத் ரயில் அக்.,30 முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் 'சேர் கார்' இருக்கையில் பயணிக்க ரூ.2,575ம், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் இருக்கையில் பயணிக்க ரூ.4,655ம் கட்டணம் வசூலிக்கப்படும். உணவு மற்றும் தேநீர் கட்டணமும் இதில் அடக்கம்.டில்லியில் இரவு காலை 8:25 மணிக்கு கிளம்பும் ரயில், பாட்னாவிற்கு இரவு 8 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் பாட்னாவில் காலை 7:30 மணிக்கு கிளம்பும் ரயில், டில்லிக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும். இடையில் கான்பூர், பிரயாக்ராஜ், பக்ஸர், அராஹ் ஆகிய நகரங்களில் நிற்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
No comments