• Breaking News

    மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா : சமய நல்லிணக்க விழாவாக நடைபெற்ற தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு


    மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

    விழாவின் முதல் நிகழ்வாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு.சகாயராஜ் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் “ஜீபிலி ஆண்டில் எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் பயணிப்போம் ” என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி மறையுரையாற்றி ஆசி வழங்கினார்.

    இந்த சிறப்பு திருப்பலியில் அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை பேரிடர் பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், மனிதநேயம் நிலைத்திடவும் வேண்டி மறைவட்ட அருட்தந்தையர்கள் மற்றும் மக்களோடு இணைந்து சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடத்தினார்.

    கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற சமயத்தவரும் நல்லிணக்கத்தோடு இணைந்து கொண்டாடிய புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்பவனி நடைபெற்றது. புனித மைக்கேல் சம்மனசு, புனித ஆரோக்கியநாதர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கியமாதா, புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார்களின் திருஉருவம் தாங்கிய ஐந்து தேர்கள் இன்னிசை முழங்க, வானவேடிக்கையுடன் ஆலய வளாகத்தில் தொடங்கி, கொண்டாரெட்டித்தெரு, அழகப்பசெட்டித்தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.


    திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து  நாட்கள் நடைபெற்ற திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    No comments