தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மீடியா பாக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் 4-வது சர்வதேச காத்தாடி திருவிழா கோவளம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இன்று துவங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
இதில் புலி, பூனை, மான், கரடி போன்ற வனவிலங்குகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள், அலாவுதீன், ஜல்லிக்கட்டு காளை, கடல்வாழ் உயிரினங்கள் என, பல்வேறு வடிவ காத்தாடிகள், கண்கவர் வண்ணங்களில், கடற்கரை காற்றில், நீலவான பின்னணியில் வானில் பறந்து பார்வையாளர் அனைவரையும் கவர்ந்தது.
இந்தியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 40 காத்தாடி கலைஞர்கள், 100க்கும் மேற்பட்ட காத்தாடிகளை தற்போது பறக்க விட்டுள்ளனர். நுழைவு கட்டணம் ஆன்-லைன் வழியில் வாங்கினால் ரூ.200, நேரில் வந்து வாங்கினால் ரூ.250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி. வளாகம் உள்ளே நடைபெறும் கலை நிகழ்ச்சிகளின் கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது. சர்வதேச பட்டம் விடும் திருவிழா வரும் 17வரை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment